சக்திமான் அசோகன் கவிதைகள் 35
.........
பூட்டைத் தேடி
வீடு வீடாக அலைகிறது
திருடனிடம் கிடைத்த சாவி.
.......
எல்லா நாய்களின்
தூக்கத்தைக் கலைக்கிறது
தெருவில் புதிதாக வந்த நாய்.
......
களிமண்ணுக்குள்
ஒளிந்திருக்கிறது
அழகான பொம்மை.
.......
வாடகை கொடுக்காத
விலங்கைக் காலி செய்யச் சொல்கிறதா
குகை.
......
வாழைப்பழத்தில் ஊசி
பூமிக்கு வலிக்காமல் இறங்குகிறது
ஆணிவேர்.
......
புகைப்படமெடுக்கத் தயாராகிறது கை
பொல பொலவென உதிர்கிறது
போலி புன்னகை.
......
காலுக்கும் பூமிக்கும் உள்ள காதலை
பிரித்து வைக்கிறது செருப்பு
இணைத்து வைக்கிறது வறுமை.
.....
சாதுவான யானையையும்
தோழனான பாகனையும்
பிரித்து விடும் மதம்.
.....
ஏவுகணையின் நுனியில்
அணுகுண்டுக்குப் பதிலாக துளியளவு வையுங்களேன்
அன்பு.
.....
சக்திமான் அசோகன்
.....
16-10-2024
......
No comments:
Post a Comment