சக்திமான்அசோகன் சிந்தனைகள் 35
..........
காசி யாத்திரை போல
கடலுக்கு போகிறாயே
ஏன் என்று கேட்டேன்.
ஏரி குளம் கண்மாவுக்கு
எப்படி போவது
சாலை இருந்தால் சொல்
என்கிறது சூடான மழை.
.....,..
பச்சிளம் குழந்தையைக் காட்டி
பிச்சை எடுக்காதே
பரிதாபம் என்றேன்
அருகில் ஒருவன்
ஆனையை வைத்துப்
பிச்சை எடுக்கிறான்
ஆசீர்வதிக்கிறது யானை.
......
ஆலைகளில் உருவாகும்
சர்க்கரையை விட
ஆயிரம் மடங்கு
உற்பத்தி செய்கிறார்கள்
நீரிழிவு வியாதி
நிரந்தரமாய் குடியிருக்கும் நோயாளிகள்.
சர்க்கரைக்குப் பஞ்சம் இல்லை.
......
எவ்வளவு பெரிய கடல்
எவ்வளவோ வாய்ப்புகள்
என்னமோ இருந்தாலும்
கண்ணை உறுத்துகிறது.
விழுங்கிய பின்னே தெரிகிறது
தொண்டைக்குள் தூண்டில் முள்.
......
காட்சியோடு இணைந்து
கண்ணீருடன் வெளியேறுவர்
முற்காலத்து சினிமா ரசிகர்கள்
இப்போதும் கண்ணீருடன் வெளியேறுகிறார்கள்
ஆனால் கஷ்டப்பட்ட காசு
விரயமானதே என்று
சொல்கிறது அவர்களின்
கனத்த இதயம்.
......
சந்தையில் விற்று தீராத
கசங்கிய பூக்களைக்
குப்பையில் வீசுகிறார்கள் வியாபாரிகள்
பக்கத்தில் கூண்டுக்குள்
சிரிக்கின்றன
செத்துப்போன கோழிகள்.
.......
விளைநிலங்கள் யாவும்
மனைகள் வீடுகளாகளாயின
வாய்க்கால் வரப்பு
சண்டை வாய்தாக்கள்
வெகுவாக குறைந்து விட்டன
மகிழ்ச்சியில் பஞ்சாயத்துகள்.
.......
சக்திமான் அசோகன்
......
17-10-2024
......
No comments:
Post a Comment