Saturday, 16 November 2024

எழுந்து வா எரிமலையே

 சக்திமான் அசோகன் கவிதைகள் 55

..........

எத்தனை காலம் தான்

 ஏழையாவே  இருப்பாய் 

எழுந்து வா என் தோழா


இனி இழப்பதற்கு 

என்ன இருக்கிறது 

ஏழ்மையைத் தவிர 

எழுந்து வா என் தோழா


எழாதே என்று

எத்தனை கதை

 சொல்வார் 

எத்தர்கள்  

இங்கே தோழா 


அது அத்தனையும் 

வெட்டிக்கதை 

அவை வீணர்களின்  

கட்டுக்கதை 

அதைவெட்டி தூர எறி தோழா


நீ இப்படியே 

இருந்து விட்டால்

இடுப்பு துணியையும் 

எட்டிப் பிடுங்கி விடுவார் 

பத்திரம் என் தோழா


அடிமையாய் இருந்து 

அடுத்தவருக்குப் படியாகி

அடங்கி கிடந்தது போதும் தோழா


எதற்காக இந்தவாழ்வு 

அதை எடுத்தெறிந்து வா 

இமயம் அருகில் என் தோழா


நீயும் பத்து மாதம்

 உன்னை ஏமாற்றி 

எத்தி பிழைக்கும் 

அவனும் பத்துமாதம் 

இதில் என்ன பேதம் 

எழுந்து வா என் தோழா


பாலும் தேனும் 

பசிக்கு நான் தருவேன் 

என்று நாளும் 

சூளுரைத்து

உன்னை நாளும்

 பட்டினியில் போடுவான் தோழா

இனி அந்த நயவஞ்சகனை

நம்பியது போதும் தோழா


விலங்கை உடைத்து 

நம்பிக்கைப் புடைக்க

வீறு கொண்டு எழுதோழா

 

பொறுத்தது போதும் 

பூமி போல

நீ பொங்கி எழு 

எரிமலையாய் தோழா


எடுத்து வை

 உன் வலது காலை

எரியட்டும் உன்கண்ணில் தீச்சுவாலை


புறப்படு என் தோழா 

போகும் தூரம் 

அதிகம்  இல்லை

அறம் ஒன்றே  

நமக்கு துணை

ஆர்ப்பரித்து  எழு தோழா


 ஏமாற்றி பிழைப்பவனை  

எட்டி உதைத்திட 

இதுதான் நேரம்  தோழா

 இனிதான் நம் காலம் தோழா

 இனி எதற்கு தயக்கம் தோழா 


ஓட்டை விற்றுவிட்டு 

ஓட்டாண்டியாய் போன உன்னை நாட்டைச் சுரண்டுவதற்கு தனது

வேட்டை நாயாய்  மாற்றிடுவான் தோழா 

இந்த நாட்டை சுரண்டுகிற கோட்டானைச் சிறைக்கூட்டுக்குள் தள்ள கொடுவாளை எடு தோழா 


அஞ்சாதே எங்கும் லஞ்சம்

 எதிலும் வஞ்சம்

துஞ்சாதே துள்ளி எழு


உழைப்பதற்கு மரியாதை 

இல்லை எனில் ஊரை கொழுத்து

அந்த சாம்பலில் இருந்து நம் சாம்ராஜ்யத்தைப் படைப்போம்


தரையில் கிடந்தது போதும்

 இனி சிகரம் தொடு தோழா 

தடையெல்லாம் உடையும்

புதுமடை எங்கும் திறக்கும்

எழுந்து வா என் தோழா 

 துணிந்து வா

என் தோழா

தோள்தருகிறேன் வா தோழா.


இந்த மண்ணும் நம் சொந்தம்

இந்த மானிடமும் நம் சொந்தம்

பஞ்சபூதமும் நம் சொந்தம்

காக்க வேண்டியது நம்கடமை 

வறுமை போக்க வேண்டியது நம் உடமை

வா என் தோழா வரிசையாக தோழா

.......

சக்திமான் அசோகன்

.....

16-11-2024

.......






No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...